Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்தார்.

நிதி அமைச்சில் இன்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதால், அதன் பிரதிபலன்களை காண முடிந்துள்ளதாகவும் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வலுவடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதென தெரிவித்த அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இதன்போது நாட்டை பொருளாதார சரிவிலிருந்து மீட்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை அங்கீகரிப்பதானது இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக ஏற்றுகொள்ளப்பட்ட கூட்டு முயற்சியை வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மை, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள், எதிர்கால நோக்கு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் பொருளாதார செயற்பாடுகளின் பலதரப்பட்ட விடயப்பரப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காகவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் இரு தரப்புக்கும் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இலங்கை சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன. , ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, பணிக்குழாம் பிரதானி அலுவலகத்தின் பணிப்பாளர் ஷிரந்த ஹேரத் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழுவின் பிரதி தலைவர் கத்யா ஸ்விரிட்சென்கா(Katya Svirydzenka), வதிவிடப் பிரதிநிதி கலாநிதி. சர்வத் ஜஹான் ( Dr. Sarwat Jahan), சோபியா ஜாங் (Sophia Zhang), சந்தேஷ் துங்கனா (Sandesh Dhungana),ஹோடா செலிம் (Hoda Selim), டிமிட்ரி ரோஸ்கோவ் (Dmitriy Rozhkov), மார்க் எடம்ஸ் ( Mark Adams),ஹுய் மியாவோ ( Hui Miao), சம்ஸன் குவாலிங்கனா (Samson Kwalingana) மற்றும் மானவீ அபேவிக்ரம உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியக் குழுவின் உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Share: