விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து.
நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தம், பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த அனர்த்தம் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், பல உயிர்களை பறித்துள்ளது. குறிப்பாக, மாவடிப்பள்ளி டிராக்டர் விபத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் மரணம், நாட்டின் அனைத்து மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கடித்துள்ளது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலர் தொடர்ந்து வாதங்களும், கருத்துக்களும் பரிமாறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சில கருத்துகள் ஆக்கபூர்வமாக இருந்தாலும், பெரும்பாலான பதிவுகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் விதத்தில் பொறுப்புக்கூறலற்றவையாக இருக்கின்றன.
நடந்து முடிந்த விபத்து ஒரு பெரும் அனர்த்தமாக இருந்தாலும், அதனை இறைவனின் நாட்டம் என நம்பி ஏற்றுக்கொள்வது முஸ்லிம்களாகிய எமது நம்பிக்கையும் கடமையுமாகும்.
இவ்விபத்தை ஒரு துயரகரமான பாடமாகக் கண்டு, விபத்திற்கான உண்மையான காரணங்களை ஆராய்ந்திட வேண்டும். அடுத்தடுத்து, ஆதாரமற்ற மற்றும் பக்கச்சார்பான பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த துறைசார் அதிகாரிகளிடம் தேவையான அழுத்தங்களை அளிக்க வேண்டும்.
எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறான இள வயது மரணங்கள் என்பது பெற்றோர்ளையும் உறவினர்களையும் மிகவும் கவலைக்குட்படுத்தக் கூடிய விடயமாகும்.
எனவே உயிரிழந்த அனைவருக்கும் நாம் இறைவனிடத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸினை வழங்க பிரார்த்திப்பதோடு அவர்களை இழந்து தவிக்கின்ற அவர்களுடைய பெற்றோர்கள், குடும்பத்தினர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இறைவன் நிரப்பமான பொறுமையை வழங்க வேண்டுமெனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக பிரார்த்திக்கின்றோம். இழப்பால் துயருறும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் நடந்து முடிந்துள்ள விபத்தினை காரணம் காட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விபத்து ஒன்று நடைபெறாமல் தடுப்பதற்காக சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதே விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான மரியாதையாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.