Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் ​பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், தோப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (16) காலை பனைக்குளம் அடுத்த ஆற்றங்கரை அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக மெரன் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆற்றங்கரை மெரைன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக் தலைமையிலான மெரைன் பொலிஸார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் இருந்த தோப்பு ஒன்றில் தடை செய்யப்பட்ட சுமார் 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் அந்த தோப்பின் உரிமையாளரான ஜகாருதீன் என்பவரை கைது செய்து கடல் அட்டை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப் பட்ட தளவாட பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட அட்டையின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 5 லட்ச ரூபாய் இருக்கலாம் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் இருசக்கர வாகனம், கைது செய்யப்பட்ட நபர்  உள்ளிட்ட அனைத்தையும் மேலதிக விசாரணைக்காக ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில்  ஒப்படைத்தனர்.

Share: