இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார ஊழியர்கள் குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பண ஜன்னல்களை அடைத்தமைக்காக 15 பண எழுத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை நேற்று (19) தெரிவித்துள்ளது.
மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்திருந்தன.
இதன்படி, மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறிச் செயற்படும் அல்லது சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
எவ்வாறாயினும், மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கடந்த வேலைநிறுத்தத்தின் போது நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி தமது கடமையை செய்யாமல் தவித்த மின்சார சபை ஊழியர்களை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.